விழிகளில் துளிக்கும்
பனித்துளியால்
சில பொழுதுகளில்
கடல் கூட கரைகிறது..
மௌனமாக
மனதினுள்ளே
மூன்றாம்
உலக யுத்தம்...
மாறிவிட்ட சமூகத்தின்
மாற்றத்தை
சுமக்கமுடியாமல்
மழுங்குகிறது
பெண்மை..
கட்டிக்காத்த புனிதம்
காட்டாற்றில் அடித்துச்செல்ல
கரைகிறது கண்மை..
அதில் குளிர்கிறது ஆண்மை..
சத்தியத்தை மறுத்து
சாத்தியமில்லாமல்
சகுனம் பார்க்கும்
சில சனியன்கள்
இன்று இங்கே...!
தட்டி நிமிர்ந்த மானுடம்
இன்று
தரங்கெட்டுத் தள்ளாட
ததிம்கிணதோம் பாடும்
சில தலையற்ற
முண்டங்கள்...
பெரியவர் என்றால்
மதிப்பு என்பதுபோய்
பெரிசு என்று இன்று
தரிசு என்றாகிப்போச்சு..
தண்ணி முதல்
தம் வரை
தள்ளாதவயதில்
நடைபயணம்...
போதாதென்று
தன் வயசுக்கு
இளசுகள் மேல்
வாலிப இச்சை...
தன்வழி உயர்வாக்கும்
தலைவர்கள்
இன்று
தன்னிலை மறந்து
தறிகெட்டு தள்ளாட
தரமற்ற வழி சொல்லி
சிறிசுகளும்
சிட்டாய் பறக்கிறதே..
நட்ட நடு வீதியிலே
நட்ட மரம் போல் கிடக்கின்றார்..
மொட்டுவிட்ட கனியிலெல்லாம்
எச்சில் இச்சை பகர்கின்றார்..
நாட்டு நடப்புக்கேற்ப
நடுத்தெருவில்
ஆடையுரிப்பு..
நிர்வாணக்கோலத்தில்
நிரந்தரமாய்
சிலையமைப்பு..
மகள் வயதிருக்கும்
ஆனால்
மனதோ
ஓரிரவில் மட்டும்
அவளை
மனைவியாக்க
துடிக்கிறது..
அருகால்
செல்லுகையில்
அணைக்கத்துடிக்கும்
கைகள் - அவளது
அங்கத்தில்
பதிவதால்
ஆறுதல் காண்கிறது போலும்..
சங்கத் தமிழ்
பொங்கும் வார்த்தைகள்
இன்று
சத்தியத்தை தொலைத்து
சாகத்துடிக்கிறது -
சரக்கடித்தவனின்
சல்லாபத்தால்...
ஐந்து வயதின்
அழகிய குழந்தைகூட
ஐம்பதுவயதின் இச்சையில்
பிச்சைகேட்டுத் தள்ளாடும்..
பிஞ்சு விரல்கள்
கெஞ்சி நிற்க -
தன்னை
கொஞ்சச்சொல்லும்
குறை கேட்பீரோ..?
முன்பிருந்த
நிலை மாறி
இன்று
மூத்தோரே
வம்பாயினர்..
தறிகெட்டு
இன்று
தம் தரமும் கெட்டு
நாளை
முறை கெட்டு
முட்டாளாகும்
வாழ்க்கை வேண்டுமா..?
எழு தோழா எழு..
விழி தோழா விழி..
அஹிம்சையோ ஆயுதமோ
எதையாவது எடு..
ஆனால்
அறிவை மட்டும்
இழக்காதே ஒருபோதும்..!
மீண்டும் விடியும்
மின்னலாய் ஒளிரும்
வசந்தமான வாழ்க்கை..!
No comments:
Post a Comment