Wednesday, May 18, 2016

என் தேசமே.



கடற்கரையின் ஓரத்திலே
கருகிப்போனது ஒரு வரலாறு. 
கனவுகண்ட விழிகள் எங்கே?
நிகழ்வு சொல்ல யார்தான் இங்கே?

தோல் கருகி
ஊண் உருகி
சிதைவுகளில் 
சிதைகளாய். 

சேய் சிதறி
தாய் கதற
உணர்வுகளில்
நெருடலாய். 

ஊனங்களும் உருக்குலைய
தேசமெங்கும் கருக்கலைய
தொலைந்துபோனோம்
இன்று தொலைவாயே போனோம்

புழுதி தெறித்த மண்ணில்
குருதிக்கணைகள் சிதற
பூக்கள் விதைத்த நிலத்தில்
பிணத்தின் சிதில சிதறல்

அய்யகோ
அழிந்துபோனோம்
ஒழிக்கபட்டோம்
இன்று மறைக்கப்பட்டு
மறந்தும் போனோம்.

தேசமே
என்றாவது உன் 
தாய்மடியை தாரைகொடு
மறு ஜென்மத்தில் 
சேயாவதற்காய்.

Sunday, May 15, 2016

நீ எனும் பெருங்கடல்.



மழை ஒழுக்குகளில்
இசையாய் கசிகிறாய் நீ.
மௌனங்களை உடைக்க விடு.
இந்த நேசங்களை பேசவிடு.

நீ எனும் ஒரு துளி போதும்
தீராப் பெருங் காதலாய்
யுகம் கடப்போம் வா.

என் மன்மத மழையே
உயிர்வேர்களில் புரையோடிப்போன
பிரிவுகளை அடித்துச்செல்.
நேசம் பற்றிய உனது தூறல்களை
விசிறிச்செல்.

நீ ஜனித்திருக்கிறாய்
நான் ஜீவிப்பதற்காய்.
மீண்டும் நம் நேசங்களை
பேசவிடு
நனையட்டும் ஜீவநாடி.



-பிறைநிலா-