Friday, March 16, 2012

இது ஒரு தொடர் கதை.

சொல்லாத
சோகத்துள்
கருவாகி
அரும்பானேன்..
தனிமையின்
கரைதனிலே
அலையாகி
துரும்பானேன்..
இளைய என் கனவுகள்
இமைக்க மறந்து போகும்..
துடிக்கும் என் நினைவுகள்
துவண்டு நெகிழ்ந்து போகும்..
நிஜங்களை பிரிந்து
நிழல்களில் வாழ்கின்றேன்..
சுகங்களை மறந்து
சுமைகளை சுமக்கின்றேன்..
சுட்டது விழிநீர்..
பட்டது ரணங்களின் கீறல்..
ஏக்கத்தின் உதயத்தில்
ஏந்திழையாய்
ஏழையிவள்..
கணங்கள் நகரவில்லை..
கவி வடிக்க முடியவில்லை..
காத்திருந்த பொழுதுகளோ
கனவாகிப்போனதிங்கு..
உள்ளத்துள்
புதைந்த சோகம்
உருவமில்லாமல்
சிதைந்துவிடும்..
உருவமுள்ள
விழிநீரோ
உயிரிலே கலந்துவிடும்..
இது ஒரு தொடர் கதை..
சுமைகளை மட்டும் சுமந்திடும்
காலத்தின் கவிதை...!

Wednesday, March 14, 2012

மரணித்துக்கொண்டிருக்கும் வேர்..


வாழ்வில் எத்தனை விடயங்களை
நாம் தொலைத்திருக்கின்றோம்..
ஆனால்
தொலைக்க விரும்பாத ஒன்று- பாசம்.

கனவின் மடிதனிலே
கவிபாடும் நேரங்களில்
கண நேரமாவது
இனிமை தருவது
நம்மீது எவரோ கொண்ட-
நாம் எவர்மீதோ கொண்ட
பாசம்..!

வாழ்வின் ஏக்கங்களில்
இதுவும் ஒன்று..
எவராலும்
மறுக்கப்படாத- வெறுக்கப்படாத
நிஜம் இது..

இருந்தாலும்
சிலவேளைகளில்
இது
பொய்த்துப்போவதுமுண்டு..

''கண்மூடித்தனமான நேசம்
ஒருவனை
முட்டாளாக்கிவிடுகின்றது''

உண்மைதான்..
தகுதியறிந்துதான் பாசம்
வைக்கவேண்டியுள்ளது
இன்றைய உலகில்..

பாசம்- அது ஒரு கலை!
பாசம்- அது ஒரு கவிதை!
பாசம்- ஏங்கித்தவிக்கும் 
உள்ளங்களுக்கு அரு மருந்து!
பாசம்-உலகின் சரித்திர சுவடி!

பரிபூரணமான பாசம்
உலகையே மாற்றிவிடுகின்றது..
எனிவரும் காலங்களில்
பாசத்தின் வேர்களை
நாம்
மரணித்த மனிதத்துள்
தேடவேண்டியிருக்கும்..!

பாசம் வேஷமாகாமல்
நேசம் செய்வோம்..
மரணித்துக்கொண்டிருக்கும்
வேர்களுக்கு
உரமூட்டுவோம்- மனிதம்
வாழ்வதற்காய்...!

Sunday, March 11, 2012

கனவு மெய்ப்பட வேண்டும்..


ஏய் 
சமுதாயமே
எதற்காக
என் கனவுகளை
உடைத்தெறிகிறாய்..?
 
என் வாழ்க்கையை
நான் 
வாழமுடியாமல்
உன் இச்சையில்
நீ வாழ்கிறாய்..
 
என் 
வாழ்வை 
திருப்பிக்கொடு
எனக்கு..
 
நான் 
வாழவேண்டும்- 
என் 
கனவுகளை
மெய்ப்பித்து..

Monday, March 5, 2012

உனக்காய் என் வாழ்த்துக்கள் ♥ ♥ ♥


நம்முடன்
இரண்டாம் முறையாய்
கலக்கும்
தித்திக்கும் உன்
♥ பிறந்த தினம் ♥

இளமையின்
எழிலோடும்..
இதயத்தின்
சுகத்தோடும்
வாழ்வினில் வரும்
ஓர்
♥ வசந்தத் திருநாள் ♥

ஜெயித்த கனவிற்கும்
ஜெயிக்கும் நினைவிற்கும்
தொலைந்த உறவிற்கும்
விதைத்த பாசத்திற்கும்
பாலமாய் வரும்
♥ அழகிய பொன்னாள் ♥

உன் உதட்டுப் புன்னகை
உள்ளத்தோடு கலந்து
உதிரத்திலே உறையவைக்கும்
♥ அற்புத நன்நாள் ♥

ஒன்றல்ல இரண்டல்ல
இந்நாட்கள்
ஓராயிரம் காண்போம்
எம்வாழ்வில்
♥ இருவரும் இணைந்து ♥

காலக்கண்ணாடியின்
கைகளில் தவழ்ந்து
உன் கனவுகள்
மெய்ப்படவேண்டும்-
என் கவிகள்
உனக்கு
பாமாலையாக வேண்டும்..

♥ ♥ ♥ இதயத்தில் கலந்த அன்புடன்
உனக்காய் என் வாழ்த்துக்கள் ♥ ♥ ♥