Sunday, February 28, 2016

அவர்களும் ஆட்டோவும்.



பின்மாலைப்பொழுதின் இருள் மெல்லமெல்ல ஒளியை விழுங்கத்தொடங்கியிருந்தது. அந்தரத்தில் நடக்கத்தொடங்கியிருந்தாள் ஹிருதயா. அன்றைய மாலைநேரத்து நிகழ்வுகள் வேகமாக நினைவில்வந்து மறைந்துகொண்டிருந்தது. டவுணில் ஒரு முக்கிய நிகழ்வுக்காக செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்தாள். ஹிருதயாவின் மோட்டார்வண்டி திருத்தவேலைக்காக மூன்றுநாட்களின்முன்பே கராஜ்ஜில் விடப்பட்டது. இதனால் நண்பியுடன் முச்சக்கரவாகனத்திலேயே நிகழ்வுக்குச் செல்லவேண்டியதாய் நிலமை அமைந்திருந்தது.

ஹிருதயாவின் வீட்டிற்கு முச்சக்கரவண்டியில் வந்த அவள் நண்பி அவளை அழைத்துக்கொண்டு நிகழ்வுக்குச்சென்றாள். அப்பொழுது ஹிருதயா நினைத்திருக்கவில்லை இப்படியான பதற்றமான சூழல் ஏற்படுமென்று. வழமைக்குமாறாக நிகழ்வு விரைவிலேயே முடிவடைய நண்பியுடன் ஹிருதயா முதலில் வந்த முச்சக்கரவண்டிக்காக காத்திருந்தாள்.

வீதியோரத்தில் நின்றிருந்த இருவரும் தம்மை கடந்துசெல்லும் முச்சக்கரவண்டிகளையே நோட்டமிட்டபடி காத்திருந்தனர். நண்பியை பார்த்து ஹிருதயா,

“என்னடி அந்த ஆட்டோக்கார அண்ணய இன்னும் காணேல்ல. வேளைக்கு வாறன் எண்டவரெல்லோ. திருப்பி ஒருக்கா கோல் பண்ணிபாக்குறியே?’’

அவள்கேட்டபடி அவளது நண்பியும் தொலைபேசியில் அவருடைய எண்களை திணித்திருந்தாள்.

’‘நீங்கள் அழைத்த இலக்கத்தை தற்பொழுது அடையமுடியாதுள்ளது. தயவுசெய்து சிறிது நேரத்தின்பின் அழைக்கவும்.’’

தொலைபேசியில் கணினிக்குரல் விடாமல் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தது. பத்து தடவைகளுக்குமேல் அழைத்தும் பதில் எதுவும் கிடைக்கவில்லை. நேரமோ ஒருமணித்தியாலத்தை தாண்டியதாய் விரைந்துகொண்டிருக்க நண்பியின் செல்பேசி அலறத்தொடங்கியது. அழைப்பில் அவள் தாயார். இவள் ஸ்பீக்கரில் விட்டு பதில்சொல்லத்தொடங்கியிருந்தாள்.

‘பிள்ள எங்க நிக்கிறாய்?’

‘ஆட்டோக்காக பாத்துக்கொண்டு நிக்கிறனணை. அந்த அண்ணை இன்னும் வரேல்ல’

‘அப்ப தனியவே உங்க நிக்கிறாய்?’

’இல்லையணை என்னோட ஒரு பிள்ளையும் நிக்கிறா. நான் வந்திடுவன்’

என்றபடி அவள் அழைப்பை துண்டித்தாள். 

‘இண்டைக்குத்தான் நான் பைக்கிண்ட தேவையை உணர்ந்தனடி’ என்ற நண்பியின் கருத்தையே மனதில் நினைத்திருந்த ஹிருதயாவிற்கு நேரம் செல்லச்செல்ல  இதய துடிப்பின் வேகம் படிப்படியாய் அதிகரித்தது.

’‘என்னடி இன்னும் அந்தாளை காணேல்ல. இப்பிடியே நடுரோட்டில விட்டுட்டுபோறது. எனக்குவேற வீட்டில எக்கச்செக்க பிரச்சினை. இதில பிந்திவேறபோனா சொல்லவே தேவயில்ல. பிரளயம்தான்.’’

என்றபடியாக ஹிருதயாவின் புலம்பல்களோடு நடக்கத்தொடங்கியிருந்தனர் இருவரும். தம்மை கடந்துசெல்லும் முச்சக்கரவண்டிகளையெல்லாம் வெறித்தபடி நடை தொடங்கியிருந்தது. இருள் பிடிக்கத்தொடங்கியிருந்தது. வீதியில் போகும் ஒருசில ஆண்களின் கண்கள் வெறித்தபடியும், சிலரின் கண்கள் பல கேள்விகளோடும் இவர்களை கடந்துசென்றது. 

நண்பியோ தொலைபேசி இலக்கத்துடன் போராடி தோற்றுக்கொண்டிருக்க 

‘’அடி, இந்த ஏரியாவும் கொஞ்சம் பயங்கரமான இடம் எண்டு சொல்லுறவையள். நாங்கள் இப்பிடி நிக்கிறது இதுக்குமேல சரிவராது. பேசாம இதிலவாற ஆட்டோவை மறிப்பம்’’

என்றாள் ஹிருதயா.

‘நீ சொல்லுறதும் சரிதான். ஆனா தெரியாத ஆட்டோக்கள மறிச்சு ஏறிப்போறதும் அவ்வளவு பாதுகாப்பு இல்லை’’

என நண்பி சொன்னாலும் எதிரே வந்த ஒரு ஆட்டோவை மறித்து இருவரும் ஏறிக்கொண்டனர். இருவரின் இதயதுடிப்பும் படபடப்பில் அதிகருத்துக்கொண்டது. 

’எங்க போகோணும்?’

’அண்ணை நாச்சிமார் கோயிலடிக்கு போகோணும்’’

என்றபடியாக மௌனமாயினர் இருவரும். ஆட்டோ அசையத்தொடங்கியதும் குப்பென்று அடித்த காற்றில் கசிப்பின் நாற்றத்தோடு சிகரெட் நாற்றமும் கலந்த ஒருவகையான மணம் ஹிருதயாவின் முகத்தி அடித்தது. எண்ணங்கள் எங்கோ சுழல நண்பியின் கைகளை இறுக பற்றிக்கொண்டாள். நண்பியின் செல்பேசியோ அலறியபடியிருக்க அவள் இவளது கைகளை பற்றியபடி பதில்சொல்லி சலித்துக்கொண்டாள்.

பிரதான வீதியை தவிர்த்து குறுக்குத்தெரு வழியாக ஆட்டோ செல்லத்தொடங்கியது. ஹிருதயாவின் மனதில் ஆயிரம் கேள்விகள் எழத்தொடங்கியிருந்தன.

‘ஏன் மெயின்ரோட்டால போகாம இதால போகுது?’
‘இப்படி சிக்கலான சந்தர்ப்பத்தில பயத்த முகத்தில வெளிக்காட்டாம இருக்கோணும்.’
’ஏதும் பிரச்சினை வந்தா பாத்துக்கொள்ளுவம். சமாளிக்கலாம்’

என்றபடியாக அவள் சிந்தனை போய்க்கொண்டிருக்க நண்பி கேட்ட கேள்விகள்கூட இவள் காதுகளில் விழவில்லை.

‘பொம்பிளையா பிறந்தா எவ்வளவுத்துக்கு பயப்பிடவேண்டிக்கிடக்கு’
‘பொது இடங்களில் பொல்லாப்பாய் பாக்கிற ஆம்பிலையள்’
‘பொல்லாப்பு சொல்லுற பொம்பிளையள்’
‘முதுகில குத்திற சமூகம்’
‘முகத்துக்குநேர பாத்து கதைக்காம கழுத்துக்கு கீழயே பாத்துக்கதக்கிற ஆம்பிளையள்’
‘உடம்போட உரசி உரசி கதக்கிற ஒரு கூட்டம்’
’கடத்திக்கொண்டுபோறதுக்கெண்டே திரியிற ஒரு கூட்டம்’

இப்படியாக அவள் எண்ணங்கள் சுழல நண்பியின் கைகளை இன்னும் அழுத்தமாக பற்றிக்கொண்டாள். ஹிருதயாவின் நினைப்பு அவளுக்கும் புரிந்திருக்கவேண்டும்.

‘நான் உன்ர வீடுவரை வந்து உன்ன விட்டுட்டு வீட்ட சொல்லிப்போட்டுப்போறனடி’’ 
என்றாள் நண்பி. ஆனால் அவளுக்கும் வீட்டுநிலை அவ்வாறே இருக்கும் என உணர்ந்த ஹிருதயா அதை பிடிவாதமாக மறுத்துவிட்டாள். ஒருவாறாக குறுந்தெருவினூடாக பிரதான சாலைக்கு எட்டிப்பார்த்தபோதுதான் ஓரளவு நின்மதி இருவருள்ளும் தொற்றியது.

நன்றாய் இருட்டியிருந்தது. நாச்சிமார்கோயில் சந்தியில் வந்துநின்ற ஆட்டோவிடம் அதிகம் பேரம்பேசாமல் கையிலிருந்த பணத்தை திணித்துவிட்டு ஒழுங்கைக்குள் நடக்கத்தொடங்கியிருந்தார்கள். நண்பியின் வீடு கடந்து செல்கையில் விரைவாக அவளிடம் விடைபெற்றபடி செல்பேசி டார்ச்லைட்டை ஒன் செய்து கொண்டாள். 

கால் தரையில் படாமல் மிதப்பதுபோல விரைவாக மூன்று வளைவுகளை கடந்திருந்தாள். வீட்டில் என்ன நடக்குமோ என்ற கவலையே அவள் மனதை அதிகம் குடைந்துகொண்டிருந்தது. என்னதாம் பெண்ணியம் பெண்சமத்துவமென்றாலும் இந்த மூடிய பிற்போக்குத்தனங்களுள் கட்டுண்ட சமூக கதவு என்றுதான் உடைபடுமோ என் எண்ணியவளாய் வீட்டிப்படலையை தள்ளியவள், என்றுமே இந்த நேரத்தில் திறக்கப்படாத வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு புரிந்தவள்போல உள்ளே சென்றாள். வசலில் நின்ற தாயாரின் முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.

-பிறைநிலா-

No comments:

Post a Comment