Tuesday, February 2, 2016

நாங்கள் தனித்தவர்களின் புதல்வர்கள்.



ஏதேன் தோட்டத்து 
இள மங்கைகளே,
எங்கள் பெண்களை 
நீங்கள் பார்த்ததுண்டா?
வரண்ட பூமியில்
விதைத்தலுக்கும்
சமையலறையில் 
வேகலுக்கும்
படுக்கையறையில்
பிழிதலுக்கும்
வாழ்க்கை தொலைத்த
எங்கள் தேவதைகளை
நீங்கள் பார்த்ததுண்டா?

நிலம் மட்டுமல்ல
மார்புகளும் வறண்டுதான்போனது
வறுமை தின்றுபோனதால்.
உச்சி வெயிலில் வேகலும்
பேய்ச்சி இவளென்று விம்மலும்
பழையதானது.

உங்கள் தேசத்தில்
பனிகளின் வண்ணமாம். 
எங்கள் வானத்தில் 
மழைகூட இல்லை
போர்மேகம் மூடியதால்.

குண்டு மழை
குருதி பெருக்கு
சிதைந்த பிண்டம்
சிதறிய மனிதம்

இன்று 
பூக்களை நடுகிறார்கள் இங்கு.
ஆனால் 
எங்கள் பெண்கள் பூச்சூட
கூந்தலை இழந்தவர்கள்.

புடைத்த நரம்புகளிலும்
வெறித்துப்போன கண்களிலும்
வெளிறிய உதடுகளிலும்
நாங்கள் தேவதைகளை பார்க்கின்றோம். 
என்ன சில பிண்டங்கள்
அவர்களை தேவ'தாசி'யென
நினைக்கும் சாபம் 
இங்குமட்டும்தான்.

உங்கள் ராட்சசர்கள்கூட
அன்பானவர்களாம். 
பிணவாடை என்பதே தெரியாதவர்களாம்.
உங்கள் பூமி சொர்க்கபுரியாம்
மண்ணுக்குள்ளே 
மலர்களின் வாசமாம்.

இங்கு வாருங்கள்
குருதிக்காட்டின் பிசுபிசுப்பு
மண்ணில் புதைந்த மனிதவாடை
மண்டையோட்டு சில்லின் சிதறல்
இதற்குமத்தியில் எங்கள் 
வாழ்க்கை.

இப்பொழுது சொல்லுங்கள்
யார் தேவதைகள்
யார் மீட்பரின் தூதர்கள்
நாங்கள் 
தனித்தவர்களின் புதல்வர்கள்
இறுதிவரை
அகதிகளின் அந்தரங்கம்!

-பிறைநிலா-
2/2/2016
8:56

No comments:

Post a Comment