Wednesday, January 20, 2016

காணாமல்போன கால்த்தடம்.

"பிள்ள எங்களபாத்து பயப்பிடுகுது போல. கூட்டிக்கொன்டுபோய் விட்டுட்டு வா" என்றபடி அந்த அக்காவின் புன்னகையை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். "கவிக்குட்டி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 

"பயந்திட்டியளோ? அப்பாட்ட போவமே?" என்றபடியாக அவளது கையைப்பிடித்து சைக்கிளின் முன்னால் அமரவைத்தான் யோகன்.

 "மாட்டன் மாட்டன் நான் முன்னுக்கு இருக்க மாட்டன். பின்னுக்குத்தான் இருப்பன்''. 

"இல்ல பின்னுக்கு அந்த அண்ணா இருக்கோணும்"

 "ஆர் அவர்? நான் பின்னுக்குத்தான் இருப்பன்"

 "சரி வாங்கோ. டேய் நீ முன்னுக்கு ஏறு" 

"ஆர் அந்த அண்ணா?" 

"நானோ. என்ர பேர் இளையவன்" என்றபடியாக இருட்டை கிழித்தபடி அவர்களது துவிச்சக்கர வண்டி கவிக்குட்டியின் வீட்டை நோக்கி விரைந்தது. அந்தக்காலப்பகுதி அரசாங்கத்திற்கும் 'அண்ணைமாருக்குமான' சமாதான உடன்படிக்கைக்காலப்பகுதி என்பதனால் மக்களோடு மக்களாக சாதாரணமாக யாழ்ப்பாணத்திலும் 'அவர்களை' காணமுடிந்தது.

2004. அது யுத்தநிறுத்த உடன்படிக்கையின் படி பல செயற்பாடுகள் இடம்பெற்ற காலப்பகுதி. இதன்கரணமாக 'அவர்களின்' செயற்பாடுகளும் கொள்கைகளும் வாழ்வியலம்சங்களும் ஏனைய மக்களின் வாழ்க்கையோடு ஒன்றுபட ஆரம்பித்திருந்தன. கவிக்குட்டி அப்போதுதான் தரம் ஆறில் படித்துக்கொண்டிருந்தாள். யோகன் அப்போதுதான் அவளுக்கு அறிமுகமாகியிருந்தான். கவியின் அப்பாவின் தூரத்து உறவினனாம். அண்ணா என்றால் உயிராய் நிற்கும் அவளுக்கு ஒரு அன்னையாயே யோகம் மாறிப்போனான். 

'அண்ணா'
'ம்ம் என்னம்மா?'
'எங்கயாச்சும் கூட்டிட்டுப்போ'
'சரீம்மா. நீ டியூசன் முடிச்சிட்டு வா போவம்'

இப்படியாக இருவரின் அன்பும் ஒருவாரத்துல் இடைவெளியின்றி ஒன்றிப்போனது. யோகன் வரும் நேரத்தை பார்த்து கவிக்குட்டி காத்திருப்பதும் கவிக்காயே அடிக்கடி அவள் வீட்டிற்கு அவன் வருவதும் வழக்கமானது. ஒருவரிலும் இல்லாத பிடிப்பு அவள்மேல் அவனுக்கு. அவள் ஒரு குட்டி தேவதையாகவே மாறிப்போனாள் அவன் வாழ்க்கையின் இடைப்பக்கங்களில். கவிக்கு சொல்லவே வார்த்தையில்லை. அண்ணனின் அன்பு எப்பிடியிருக்குமென்று ஏங்கியவள் இன்று இவன் கைகளில் குழந்தையாகவே மறுபடி பிறந்துவிட்டாள்.

'அண்ணா இது என்ன உங்கட கையில கழுத்தில கிடக்கு?'

'அதுவாம்மா அது அண்ணாண்ட நம்பர். அண்ணா துலஞ்சுபோனா கண்டுபிடிக்கவேணுமெல்லோ'

':'( அண்ணா....'

'அச்சோ ஏண்டா அழக்குடாது எண்ட செல்லமெல்லோ'

'நீ துலஞ்செல்லாம் போகமாட்டாய்தானே'

'இல்லம்மா அண்ணா உன்னவிட்டுட்டு எங்கயும் போகமாட்டன்.'

ஒருமாதம் கடந்திருக்கும். யோகனின் வருகை கொஞ்சம் கொஞ்சமாய் குறையத்தொடங்கியது. கவிக்குட்டிக்கு அண்ணனை பார்க்கமுடியவில்லை என்ற கவலை அதிகமாகியது. ஒரு நாள் அவனும் வந்தான். 

'கவீம்மா உங்களிட்ட இருக்கிற அண்ணாட போட்டோஸ் எல்லாத்தையும் எரிச்சுவிடுங்கோ'

என்றபடி கவியின் அப்பாவிடமும் விடைபெற்றான். அதன்பிறகு கவிக்குட்டி அவனை பார்க்கவே இல்லை. அவன் கால்த்தடத்தின் மண்துணிக்கைகளை கொஞ்சமாய் பொறுக்கிவைத்திருந்தாள். கடைசியில் அது காணாமலேபோகுமென்று அப்போது அவள் அறிந்திருக்கவில்லை. அவன் போகும்போதே அவளின் அப்பா தனக்குள் சொல்லிக்கொண்டார்
'ஹ்ம்.. சண்டைக்கு போறாங்கள் போல'.

No comments:

Post a Comment