Saturday, September 12, 2015

கண்ணீர்ப்பாத’ரசம்’



விரிந்த கண்களுக்குள் எதையோ தொலைத்த சோகத்தோடு தனியாக சிரித்துக்கொண்டிருந்தாள் அவள். மெல்லமெல்ல இருட்டத்தொடங்கிய அடிவானை பார்த்தபடி அன்றைய சம்பவங்களை அசைபோட்டுக்கொண்டிருந்தாள். இல்லை இல்லை மனதினுள் பதிந்தவற்றை அழிப்பதற்காய் முயன்றுகொண்டிருந்தாள்.

இது நல்லூரான் கொடியேற்ற காலம்.
யாழ்ப்பாணமே களைகட்டி விழாக்கோலமாய் பூரித்து நிற்கும். யாழ்ப்பாணத்தின் திமிரே நல்லைக் கந்தனின் கோபுரம்தான் என்று சொல்லுமளவுக்கு இது ஒரு பெருவிழாக்காலம்.

’’எல்லாரும் நல்லூருக்கு போயினம். நானும் போகவேணும். ஆரோட போறது. ஆருமே இல்லாத நான் ஆரோட போறது. அவரத்தான் கேக்கவேணும். ஆனா அவருக்கும் நேரமிருக்கோ தெரியா’’

தனக்குள்ளாக நேற்று இரவு புலம்பிக்கொண்டாள் அவள்.

‘’இஞ்ச நாங்கள் நாளைக்கொருக்கா நல்லூருக்கு போவமே?’’ என்று அவன் கேட்க பட்டாம்பூச்சியாகி பறந்ததென்னவோ அவள்தான். 

’’நான் அங்க போய் முருகனை கும்பிடுவன். அங்க இருக்கிற மணிக்கடையில இவர்ர கைய பிடிச்சபடியே நிறைய சாமான் வாங்குவன்.’’

‘’எங்க எங்கயோ இருந்தெல்லாம் நிறைய சனம் வருமாம் குடும்பத்தோட. நானும் நாளைக்கு  போவன்’’
என்றபடி தூங்கத்தொடங்கியது அவள் கனவு.

மறுநாள் நல்லூர் வீதியில் அவனது கைகளை பிடித்தபடியே அழகனின் தரிசனத்தோடு ஆரம்பித்தது மணிக்கடை உலாத்தல்.

என்றும் அவள் குழந்தை மனதிற்கும் கேலிபேச்சிற்கும் கபடமற்ற புன்னகைக்கும் அடிமையான அவன் அவள் கண்களுள் தொலைவதையே வழக்கமாககொண்டிருந்தான். அவள் பேசும் கேலிகளை ரசிக்கத்தெரிந்த அவனுக்கு என்னவோ இன்றையநாள் ரசனையில்லாமல்போனது.

‘இஞ்ச உந்த பழய கதை கதைக்கவே இஞ்ச வந்தனி. முடிஞ்சுபோனதையெல்லாம் திருப்ப கேக்கவேணுமெண்டுதானெ இப்ப சொன்னனி?’’ 
என சம்பந்தமற்ற வார்த்தைகளைக்கொண்டு கோபத்தை கொட்டித்தீர்த்தது அவன் வார்த்தைகள்.

‘’நாந்தான் விசரிபோல. எனக்கு உந்த வாய் சும்மா கிடவாது. நாந்தான் பிழையா என்னத்தையோ கதச்சுப்போட்டன்’’ என்று மனதிற்குள்கூட அவனை விட்டுக்குடுக்கமுடியாதபடி கண்ணீரை மனதிற்குள் மறைத்தவளாய் அவன்பின்னே வீடுவந்துசேர்ந்தாள்.

இருவரும் பேசிக்கொள்ளாத இந்த தனித்திருக்கும் பொழுதுகளில் இதையெல்லாம் மறக்க நினைத்தபடி நல்லூருக்கு போவதற்குமுன்னான ஒரு கணத்தை எண்ணிப்பார்த்தாள்.

’’அடியேய் உனக்கொண்டு தெரியுமே. நான் இண்டைக்கு அவரோட நல்லூருக்கு போகப்போறன்டி. அங்க போறது பெரிசில்லையடி. அவர்தாற அந்த அன்புதான் பெரிய புதையல் எனக்கு’’ 
என்றபடி குழந்தையாகி தோழியோடு பேசிக்கொண்ட ஒரு சில வார்த்தைகள்.

எவ்வளவு பெரிய முட்டாள் அவள்.

அவள் கண்களிலிருந்து மையோடு கரைந்தபடி உருண்டு விழுந்த கண்ணீர்த்துளியொன்று சற்றுமுன்னர்தான் நல்லூரின் மண்மேடுகளில் ஒன்றில் காய்ந்து புதைந்துபோயிருந்தது.


-பிறைநிலா-

Saturday, July 18, 2015

பலிகளின் பிரமாண்டம் ’பாகுபலி’



பிரமாண்டங்களின் உச்சத்தில் ரசிகர்களை பலியாக்கியது ‘பாகுபலி’
ஆரம்பமே அட்டகாசமான அசத்தல். அனைத்து பாத்திரவார்ப்புக்களும் அச்சுஅசலாக பொருந்தியிருக்கிறது அத்தனை நடிகர்களுக்கும். படப்பிடிப்பின் ஒவ்வொரு தளங்களும் கிராபிக்சோடு சேர்ந்து அட்டகாசமான காட்சிப்பின்னணி.



சரி மகிழ்மதி கோட்டைக்கு வருவோம். கிராபிக்ஸ் அசத்தல். கோட்டை பிரமாண்டம் எனினும் மனதை அவ்வளவாக தொட்டுவிடவில்லை என்பது என் கருத்து. சாண்டில்யன், கல்கியின் எழுத்துக்களில் கோட்டையின் வசீகரம் இருப்பதுபோல் இங்கு காட்சிகளில் அவ்வளவாக தென்படவில்லை.

படத்தை பார்க்கும்போது சாண்டில்யன், கல்கி ஆகியோரின் வரலாற்று எழுத்துக்களும் அதன் காட்சிகளும் மனதினுள் வந்துபோயின. நீண்டநாட்கள் இப்படியொரு திரைப்படத்தை வரலாற்றியலினூடாக பார்த்துவிடவேண்டுமென்ற அவா நிறைவேறியதில் திருப்தியே.

இசை அருமை எனினும் ஒருசில சந்தர்பங்களில் காட்சியோடு அவ்வளவாக பொருந்திவிடவில்லை. காட்சியமைப்புக்களில் காமெரா பிரமாதம். காமெரா போகுமிடமெங்கும் பிரமாண்டங்களின் எல்லையற்ற சாதனை.



அடுத்து படத்தில் சொல்லப்படவேண்டிய பாத்திரங்கள் மூவர். தமன்னா மற்றும் சத்தியராஜ்.
தமன்னாவின் நடிப்பு முதல்தடவையாக அபாரம். அதனோடு சேர்த்து போராளிப்பெண்ணின் (அவந்திகா) பாத்திரத்தில் கச்சிதமாய் வாழ்ந்திருக்கிறார். முக்கியமான விடயம் என்னவென்றால் தமன்னாவின் நிறக்குறைப்பு (மேக்கப்) மிகவும் கச்சிதமாய் பொருந்தியிருக்கின்றமையே. 


அடுத்து சத்தியராஜ். பலநாள் இடைவெளியின் பின்னர் இவரது அபாரமானநடிப்பை காணும் வாய்ப்பு. அட்டகாசம். என்னைப் பொறுத்தவரை திரைப்படத்தின் நாயகனே இவர்தான்.


காலகேய அரசனாக  பிரபாகரின் நடிப்பு அசத்தல். 

அடுத்து காதல்காட்சி. அடடா வரலாற்றுநாவல்களில் படித்து சுவைத்த சங்கத்து காதல் இதுவோ என்று எண்ணத்தோன்றுகிறது. இக்காட்சியில் என் கண்முன்னே சாண்டில்யன் எழுத்துக்களே வந்துபோயின. போராட்ட லட்சியம் நிறைந்தவளுக்குள் பெண்மையை தட்டியெழுப்பும் நாயகனின் நளினம் அருமை. காதலை உணரச்செய்யும் அந்தக்கணத்தில் கமெராவின் கைவரிசை அசத்தல்.

’’கண்டம்பரி’’ நடனத்தின்மூலம் itemsong காட்சிகள் - வியப்பு!



ஒருசில இடங்களில் கிராபிக்ஸ் சுதப்பல் என்றாலும் காட்சிப்பிரமாண்டத்தில் அது மறைந்துபோனது. என்னதான் இருந்தாலும் காலகேயர்களின் யுத்த காட்சி அத்தனை பிரமிப்பு. திரைக்கதையுடன் சேர்த்து நாமும் வாழ்ந்துபாத்தோம். வாட்களின் வீச்சும் ஈட்டிகளின் கூர்மையும் பிரமிப்பு. இதனைவிட நாவல்களில் மட்டுமே படித்து சுவைத்த போர்க்கருவிகளின் பாவனையை காட்சியில் காணும் அந்தக்கணம் எம்முள்ளும் இரத்தம் கொதிக்கும். 

மொத்தத்தில் பாகுபலி பிரமாண்டங்களின் உச்சம். 

ராஜமௌலியிடம் ஒரேயொரு கேள்விதான் :-
‘நீங்க ஏன் பொன்னியின் செல்வனை படமாக்கக்கூடாது ? (சரித்திரத்துவம் குறையாமல்) ’

பாகுபலியின் அடுத்த பகுதிக்காய் கத்திருக்கிறோம்.

-பிறைநிலா-


Saturday, July 11, 2015

கௌதமி vs கமல் vs ஆஷா சரத்.



’பாபநாசம்’ பெயரைப்போலவே படமும் அருமை.

படத்தின் வெற்றிக்கு வாய்ப்பளித்த விடயங்கள் ஏராளம்.
1) கௌதமியின் இயல்பான நடிப்பு
2) கமலின் யதார்த்த பாத்திரபுனைவு
3) படத்தின் காட்சியமைப்பு
4) மொழிநடை
5) காமெரா, இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை....

விறுவிறுப்பான அதேநேரம் அழகான திரைக்கதையுடன் அமைந்த அற்புதமானதொரு கலைப்படைப்பு. ஒவ்வொரு பாத்திரங்களின் கண்கள் பேசும் மொழியையும் ஒன்றுவிடாமல் பதிவுசெய்துள்ளது காமெரா. எப்படி ஒரு நடுத்தர குடும்பம் அன்பாலும் அழகாலும் பின்னப்பட்டிருக்கும் என்பதை வாழ்ந்துகாட்டியிருக்கிரார்கள். படம்பார்க்கும்போதே நாமும் அவற்றோடு வாழ்ந்துவிடுகிறோம்.

எனக்கென்னவோ பலநாட்களின் பின் கமலின் இயல்பான நடிப்பை உணரமுடிந்தது. ( இப்பகூட கமல் அழகாத்தான் தெரியுறாரு கௌதமிய விட) அன்பான தந்தை தாய், அழகான பிள்ளைகள் என அழகியதொரு குடும்பம். வாழ்கையின் ஆரம்பத்தில் இருந்த காதல் மாறாமல் கைகோர்க்கும் அழகான கணவன் மனைவி என யதார்த்தவாழ்வியலின் பிரதிபலிப்புக்கள் அருமை.

அளவான விறுவிறுப்புடன் ரசிகர்களுக்கான ஊகம் எதுவுமின்றி காட்சி நகர்கிறது. காட்சியமைப்புப்பற்றி பார்த்தால் செயற்கையின்றி இயற்கையோடு இணைந்த அழகான பிரதேசங்களில் படமாக்கப்பட்டுள்ளது அருமை. காமெரா கதைபேசியுள்ளவிதம் அட்டகாசம்.
குறித்த இடங்களில் வரும் extreme close up shot மற்றும் extreme wide shot இன் காட்சிக்கோர்ப்பு அருமை.

ஜிப்ரானின் இசை அருமை. கதையோடு கதைபேசும் இசை அட்டகாசம். பின்னணியிசை தேவைக்கேற்றவகையில் அருமை.
கதைசொல்லும் பாங்கு சலிப்பற்றவகையில் ஆர்வத்தைதூண்டும் விதமாய் நகர்கிறது படைப்பு.



இதனைவிட முக்கியவிடயம் ஆஷா சரத். வைத்தகண் எடுக்காமல் பார்க்கவைக்குமளவு அற்புதமான நடிப்பு. இவரது கதைபேசும் கண்கள் அருமை. பாத்திரத்திற்கேற்ற உடலசைவு + பேச்சு + கொஞ்சம் திமிர் + கெஞ்சும் தாய்மை + பேச்சு + போலீசுக்கேற்ற கம்பீரம் எல்லாம் அட்டகாசம்.

ஆக மொத்தத்தில் அழகான அற்புதமான படைப்புக்களில் இதுவும் ஒன்று.
பாபநாசத்தில் குளித்து பாழ்பட்டுப்போன தமிழ்சினிமாவின் பாவங்களை கழுவிக்கொள்வோம்.

-பிறைநிலா-

Tuesday, October 28, 2014

என் ஒளியிழந்த வானை உமிழ்ந்துகொண்டிருக்கிறாய் ஷாகிரா..!


என் ஒளியிழந்த வானை 
உமிழ்ந்துகொண்டிருக்கிறாய்
ஷாகிரா

சிவப்பு பச்சை மஞ்சளென
நீ துப்பிய வண்ணங்கள்
அங்கங்கே
சிதறி பறக்கின்றன.

வானவில்லின்
வண்ணம் விட்டு
புது வண்ணம் 
குழைத்து இழைக்கிறாய்.

’சர்பத்’நிறத்தையும் மிஞ்சிடும்
இளவண்ண இதழ்கொண்டு
இதழ்குவிக்கின்றாய்.

ஜொலித்து நிற்பது
என் வண்ணம் கரைந்த
வானம் மட்டுமல்ல
எண்ணமிழந்த
வாழ்க்கையும் தான்.

உன் புன்னகையின் 
விழிம்பில்
பரிசளிக்கின்றாய் 
’குதா’வின் 
பரிசுத்த ஆசிகளை.

ஷாகிரா...

ஓ..நீ 
எங்காவது 
பறந்துகொண்டேயிருப்பாய்
ஏதாவது ஒரு
ஒளியற்ற வானை
வண்ணமாய் உமிழ்வதற்கு!



-பிறைநிலா-