சிறகடித்து பறந்திருந்தோம்...
சில கர்வங்களையும்
பல சிரிப்புக்களையும்
உனக்காகவே உதிர்த்திருந்தேன் நான்...
உன் நெருக்கம்
உனதான என் கிறக்கம்
நம் அணைப்பு அணைப்பினூடே
ஜனித்துப்போன
நேசத்தின் துளிர்ப்பு
இதையும் தாண்டியதாய்
உன் ஆண்மையில் உறைந்துபோன
தாய்மையின் தனி ஸ்பரிசம்...
நமக்கான தேசமதில்
என்னை மட்டும் ரட்சிப்பதற்காய்
நீ ஒரு ஆண் தேவதைபோல் தெரிந்திருந்தாய்
இந்த விழிகளுக்கு...
ஸ்வாசத்தில் நிறைந்தாய்
என் நேசத்தில் மலர்ந்தாய்..
எனக்குள் மலர்ந்து
என்னையே இழுத்துக்கொண்டாய்...
வற்றிவிடாத ஜீவநதி நீ...
உன் அலையடிப்பில்
ஜனித்து சிதறும் நீர்க்குமிழி நான்...
நீ மீட்டுகின்ற இசைவீணையாய்
நாதமெழுப்பும் என் ஜீவன்...
உன் பேச்சுக்களின் அணைப்பிலும்
கண்பார்வைகளின் இமைப்பிலும்
இணைந்துபோனேன் உன்னிடத்தில்
ஸ்பரிசமற்ற அணைப்புக்களாலே...
அஹிம்சையாய் இம்சிக்கும்
உன் காதல் போதும்
உன்னவளாய் நான் உருக்கொண்டு
யுகம்பல தாண்டிட..
காமத்தில்
காதலை சிதறவிடாது கோர்க்கவும்
காதலில்
தாய்மையை அழகாக்கிச் சூடவும்
உன்னால் மட்டுமே முடிகின்றது...
கணவனாய் காதலனாய்
அண்ணனாய் அன்னையாய்
சமயத்தில் தோழனாயென்று
பன்முகம் கொண்ட பாசாங்கற்ற திறமை நடிகன் நீ...
உன் நடிப்பின் உறைதலில்
சிறகடித்துபறக்கும் சிட்டாய்
உன் பின்னே நான்...
வா செல்வோம்
யுகம் பல தாண்டியதாய்
நீயும் நானும் சிறகடித்து பறப்போம்...
அந்த ஆதித்தாயின் பிள்ளைகளாய்
நாம் மட்டும் மீண்டும் மீண்டும் ஜனிப்போம்...
(காதலர்களுக்காய் ஓர் கற்பனையுலகு)
-பிறைநிலா-
Really supperb pirai.... .
ReplyDelete