Friday, July 12, 2013

என் வருங்கால கணவனுக்காக..


கனவுகளை நான் சுமந்து 
கண்மூடி காத்திருக்கிறேன். 
காலத்தால் நிச்சயிக்கப்பட்ட 
அந்த வரமாகும் திருமண நாள் எண்ணி.. 
என் கை பிடிக்க நீ துடிக்கும் 
அந்த நேரம் 
என் வானமெங்கும் 
வசந்தங்களை தூவும் அந்தி நேரம்.. 
ஸ்வாசங்கள் கூட 
சுகிக்கமறக்கும் 
உன்னை கண்டால்.. 
உன் ஓரவிழி பார்வையில் 
உயிர் உறையவைக்கும் 
மாயம் செய்து...

கோடி ஜென்மம் 
வாழ்ப்போகும் நீ 
எனக்காக என் கனவுகளில் 
இப்படி வாழ்கின்றாய்..

உன் பேரும் தெரியாது. 
உன் ஊரும் தெரியாது. 
ஆனால் எனக்கான ராஜகுமாரனாக 
உன் ஒற்றைக்குதிரை பிடித்து 
எனை என்றோ தேடி வருவாய்.. 
அந்த தேடலின் முடிவில் தான் 
நமக்கான வாழ்க்கை ஆரம்பமாகும்..


என் கனவுகளில் நீ கவிஞனாய் வாழ்கின்றாய் 
என்னை பாடுவதற்காக.
என் கனவுகளில் நீ காதலனாய் வாழ்கின்றாய் 
என்னை காதலின் அன்பினால் கொல்லுவதற்காக.
என் கனவுகளில் நீ ஓவியனாய் வாழ்கின்றாய் 
உன் விழிக்குள் என்னை சிறையெடுப்பதற்காக.
என் கனவுகளி நீ தந்தையாகின்றாய் 
உன் பிள்ளையாய் என்னை தாலாட்டிட. 
என் கனவுகளில் மட்டுமல்ல கண்ணே 
எந்தன் ஜீவனிலும் நிறைந்துபோகின்றாய் 
நீயாக நான் ஆகிட.


ஸ்வாசமே நீயாகிட 
ரசிக்கவேண்டும் உன் நினைவுகளை.. 
கனவுகளில் மாலை கோர்த்து 
சுகிக்கவேண்டும் உன் பொழுதுகளை.. 
உன்னை இமைகளில் சிறையெடுத்து 
இதயத்தில் பூட்டிக்கொள்ளவேண்டும்.. 
நான் மட்டும் உருகி என்றும் 
உன்னழகை பருகிட வேண்டும்.. 
எனக்கானவனாய் மட்டும்
என்றும் நீ மலர்ந்திட வேண்டும்.. 
என்றென்றும் நாம் இணைந்து 
ஏழு ஜென்மம் வாழவேண்டும்.. 

நீ நீயாக வாழ்கிறாய் என்னுள்ளே 
என் பல ஏக்கங்களை சுமந்து.. 
உன்னைப்பற்றிய என் எதிர்பார்ப்பு 
இப்படியாக விரிகிறது மொழிவழியே.. 


பரந்து விரிந்த பூமியிலே 
பலகலையும் கற்றவனாய், 
என் விழிகள் மட்டும் 
பார்ப்பதற்கு மன்மதனாய், 
நட்சத்திர கூட்டத்துக்கே இளவரசாய், 
என் விழி பார்த்து மொழி பேசுபவனாய், 
என் இதயத்தை 
ஒரு பார்வையில் உணர்பவனாய், 
என் மனதின் காயத்திற்கு 
ஒரு காதல் வைத்தியனாய், 
காலமெல்லாம் குறையாமல் 
தினம் என்னை காதலிப்பவனாய், 
உன் தோளோடு சாய்த்து 
என்னை அன்பால் உறங்கவைப்பவனாய், 
உன் தாய்போல என்னை 
தினமும் நோகாமல் நேசிப்பவனாய், 
எந்தன் பிள்ளையாகி என்னை 
இம்சிக்கவைத்து ரசிப்பவனாய்.. 
இன்னும் இன்னும் 
எத்தனை எத்தனையோ 
கனவுகள் என் மனதில்.. 
அதில் நீ மட்டும் தானே வாழ்கிறாய்.. 

சின்னச்சின்ன சண்டைகள், 
மென்மையான கோபங்கள், 
அடுத்த நொடியே புன்னைகைகளுடன் 
இணைந்த அன்பு சொட்டும் பேச்சுக்கள் வேண்டும்.. 
உன் நினைவில் நானும் 
என் நினைவில் நீயும் 
உயிர் உருகும் அந்த நிமிடங்கள் வேண்டும்... 
கோபங்களின் முடிவில் 
பேசாமல் மட்டும் விட்டுவிடாதே.. 
இறந்தே போவேன் நான் 
என் உணர்வில்.. 
என் பிளைகளுக்கு அன்பாய் 
மன்னிப்பாய் நீ ஆயிரம் தடவை.. 
அந்த அன்பே போதும் 
உன் காலடியில் நான் வாழ..

ஆனால் 
நிஜமாக சொல்கிறேன் 
நீ யாரென்றே தெரியாது.. 
உன் ஊரென்ன? பேரென்ன? 
எப்படியிருப்பாய் எதுவும் அறியாது 
நான் மட்டும் காத்திருக்கிறேன் 
என் வருங்காலமாக வரப்போகும் 
உனக்காக 
என் அன்புக் கணவனுக்காக...


No comments:

Post a Comment