Tuesday, February 2, 2016

நாங்கள் தனித்தவர்களின் புதல்வர்கள்.



ஏதேன் தோட்டத்து 
இள மங்கைகளே,
எங்கள் பெண்களை 
நீங்கள் பார்த்ததுண்டா?
வரண்ட பூமியில்
விதைத்தலுக்கும்
சமையலறையில் 
வேகலுக்கும்
படுக்கையறையில்
பிழிதலுக்கும்
வாழ்க்கை தொலைத்த
எங்கள் தேவதைகளை
நீங்கள் பார்த்ததுண்டா?

நிலம் மட்டுமல்ல
மார்புகளும் வறண்டுதான்போனது
வறுமை தின்றுபோனதால்.
உச்சி வெயிலில் வேகலும்
பேய்ச்சி இவளென்று விம்மலும்
பழையதானது.

உங்கள் தேசத்தில்
பனிகளின் வண்ணமாம். 
எங்கள் வானத்தில் 
மழைகூட இல்லை
போர்மேகம் மூடியதால்.

குண்டு மழை
குருதி பெருக்கு
சிதைந்த பிண்டம்
சிதறிய மனிதம்

இன்று 
பூக்களை நடுகிறார்கள் இங்கு.
ஆனால் 
எங்கள் பெண்கள் பூச்சூட
கூந்தலை இழந்தவர்கள்.

புடைத்த நரம்புகளிலும்
வெறித்துப்போன கண்களிலும்
வெளிறிய உதடுகளிலும்
நாங்கள் தேவதைகளை பார்க்கின்றோம். 
என்ன சில பிண்டங்கள்
அவர்களை தேவ'தாசி'யென
நினைக்கும் சாபம் 
இங்குமட்டும்தான்.

உங்கள் ராட்சசர்கள்கூட
அன்பானவர்களாம். 
பிணவாடை என்பதே தெரியாதவர்களாம்.
உங்கள் பூமி சொர்க்கபுரியாம்
மண்ணுக்குள்ளே 
மலர்களின் வாசமாம்.

இங்கு வாருங்கள்
குருதிக்காட்டின் பிசுபிசுப்பு
மண்ணில் புதைந்த மனிதவாடை
மண்டையோட்டு சில்லின் சிதறல்
இதற்குமத்தியில் எங்கள் 
வாழ்க்கை.

இப்பொழுது சொல்லுங்கள்
யார் தேவதைகள்
யார் மீட்பரின் தூதர்கள்
நாங்கள் 
தனித்தவர்களின் புதல்வர்கள்
இறுதிவரை
அகதிகளின் அந்தரங்கம்!

-பிறைநிலா-
2/2/2016
8:56

Monday, February 1, 2016

ப்ரிய நட்சத்ரா..


என் ப்ரிய நட்சத்ரா,
உன் கண்களை மூடிக்கொள்.
நீ சூழ்ந்துள்ள என் நினைவுகள்
அழகானவை.
என் நேசக்கடல்மீது உனக்கான
அலைகளை பரப்பிவிடுகின்றேன்.
பார்த்து மகிழ்ந்துகொள்
கண்களைத்திறந்துவிடாதே.

பழிகளின் கற்கள் உன்னை 
தாக்கக்கூடும்.
பெண் நீ என்பதால்
நடத்தையில்கூட உன்னை
பழிக்கக்கூடும்.
வஞ்சகக்காரியாய் நீ தெரியக்கூடும்.
உன்னை வஞ்சிக்க ஒரு கூட்டம்
அலையக்கூடும்.
உன் படுக்கையில் மட்டும் 
பங்குகேட்டு
பரிகசிக்கவும் ஸ்பரிசிக்கவும்
அலையக்கூடும்.
நீ தனித்திருக்கையில் உன்னை
தீண்டிக்கொல்ல அரவமாய் 
அணைக்கக்கூடும்.

ஆதலால் என் பிரிய
நட்சத்ரா,
உன் கண்களைத் திறந்துவிடாதே.
என் நேச அலைகளோடே
அமைதிகொள்
நாம் புதிதாய் பிறந்து 
உலகை விதைப்போம் 
அதுவரை உன் கண்களை
நீ திறந்துவிடாதே.

-பிறைநிலா-
01/02/2016
4:49pm

Thursday, January 28, 2016

ஹிருதயா!



மௌனச்சாயத்தை
என் உதடுகளில் அப்பிவிடுகின்றாய். 
என் கேள்விகளுக்கு பதில் இல்லை.
என் நேசங்களின் முகவரி இல்லை.
உன்னிடம் 
எனக்கான பொழுதுகளும் இல்லை. 
இறுதியில் சாயம் மட்டும் என் உதடுகளுக்கு.

அது ஒரு வெளி
ஆத்மாவும் நானும் பேசும்பொருள்.

இருக்கிறாயா?
இருக்கிறேன் இருக்கிறேன்!
புரிகிறதா உனக்கு?
புரியவில்லை தெரிகிறது!
முடிவு?
விளங்கவில்லை.
ஓ.. என் ஆத்மாவே...
ஓலமிடாதே அலுத்துவிட்டது.
என் கண்ணீருமா?
பழகிப்போனது.
அப்பொழுது நான்?
பழையவள்தானே நீ!
என் நேசம்?
புதிதாய் ஏதுமில்லை.

ஆக,
பரிசுத்தத்திற்கு பதில் புதுமைதான் உன் தேவை.
ஹ..ஹ.. உலகத்தேவை!
ஆத்மார்த்தீ ஒழிந்துபோ
இயலாது.
ஏன்?
நான்போனால் நீ பிணம்.
அந்த திமிர்தானே உனக்கு.
இல்லை யதார்த்தம்.

மீண்டும் மௌனச்சாயம்
உதடுகளில்.
ஆத்மா புகுந்துகொண்டது 
ஹிருதயஒலிக்குள்.
வெளி குறுகி வழியாக
நீ தேடப்படும் 
இறுதி பயணவிளிம்புகளில்
நடக்கத்தொடங்கியிருந்தது 'நான்'. 

-பிறைநிலா-
28-01-2016
6:35pm


Friday, January 22, 2016

ப்ரியத்தீ!


நீண்ட பொழுதொன்று 
பிரியங்களோடு 
பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டது காலம். 
வார்த்தைகளின்றிய சலசலப்பை 
பார்வைகளால் பகிர்ந்துகொண்டது. 
மயான அமைதி. 
மட்டுப்படுத்தப்பட்டிருந்தது 
உனக்கும் எனக்குமான 
இடைவெளி. 

நான் 
நரகத்தின் வாசலில் தேவதையாயும் 
நீ 
சொர்க்கத்தின் உச்சத்தில் ராட்சசனாயும்.

நடுவில் பெருகியதென்னவோ 
நேசத்தின் ஜீவநதி. 
என் கண்களுக்கும் 
உன் பாதங்களுக்குமான ஸ்பரிசம் 
நதியில் கலந்துபோனது. 

இறுதி அணைப்பு அது. 
பார்வைகளால் பரிமாறப்பட்டது. 
ஸ்பரிசிக்கத்துடித்தது என்னவோ 
பிரியங்களை மட்டும்தான். 
முடிவிலியாய் மூடப்பட்டது 
உனக்கும் எனக்குமான 
பிரியங்களின் நுழைவாயில். 

-பிறைநிலா-
22/01/2016
3:25