Showing posts with label poem. Show all posts
Showing posts with label poem. Show all posts

Wednesday, May 18, 2016

என் தேசமே.



கடற்கரையின் ஓரத்திலே
கருகிப்போனது ஒரு வரலாறு. 
கனவுகண்ட விழிகள் எங்கே?
நிகழ்வு சொல்ல யார்தான் இங்கே?

தோல் கருகி
ஊண் உருகி
சிதைவுகளில் 
சிதைகளாய். 

சேய் சிதறி
தாய் கதற
உணர்வுகளில்
நெருடலாய். 

ஊனங்களும் உருக்குலைய
தேசமெங்கும் கருக்கலைய
தொலைந்துபோனோம்
இன்று தொலைவாயே போனோம்

புழுதி தெறித்த மண்ணில்
குருதிக்கணைகள் சிதற
பூக்கள் விதைத்த நிலத்தில்
பிணத்தின் சிதில சிதறல்

அய்யகோ
அழிந்துபோனோம்
ஒழிக்கபட்டோம்
இன்று மறைக்கப்பட்டு
மறந்தும் போனோம்.

தேசமே
என்றாவது உன் 
தாய்மடியை தாரைகொடு
மறு ஜென்மத்தில் 
சேயாவதற்காய்.

Sunday, May 15, 2016

நீ எனும் பெருங்கடல்.



மழை ஒழுக்குகளில்
இசையாய் கசிகிறாய் நீ.
மௌனங்களை உடைக்க விடு.
இந்த நேசங்களை பேசவிடு.

நீ எனும் ஒரு துளி போதும்
தீராப் பெருங் காதலாய்
யுகம் கடப்போம் வா.

என் மன்மத மழையே
உயிர்வேர்களில் புரையோடிப்போன
பிரிவுகளை அடித்துச்செல்.
நேசம் பற்றிய உனது தூறல்களை
விசிறிச்செல்.

நீ ஜனித்திருக்கிறாய்
நான் ஜீவிப்பதற்காய்.
மீண்டும் நம் நேசங்களை
பேசவிடு
நனையட்டும் ஜீவநாடி.



-பிறைநிலா-

Monday, February 8, 2016

மரணமே முத்தமிடு



என் ஜீவ மரணமே
ஒருமுறையாவது முத்தமிடு
என் இதழ்களை.
உறக்கமில்லாமல் கழியும்
ஒவ்வொரு நிசிகளின் நெருடலிலும்
ஓராயிரம் வலி தெறிக்க
விடியலில் புன்னகைக்கும் 
போலியாய் சுயம் இங்கு.
கல்லடிபட்டு காய்த்துப்போன ஊனங்கள் 
கலர்கலர் கனவுகளை
கறுப்புவெள்ளையாக்கிய (அ)நியாயங்கள்
பெண்தானே என்று அடக்கிப்போன அகம்பாவ ஆத்மாக்கள்
முதுகுவழி கிழித்து முகம்நோக்கி
சிரிக்கும் முள்ளந்தண்டிலிகள்

அகோரங்கள்கூட அழகு
ஆனால் 
அசிங்கங்கள் எப்படி அழகாகும்?
சாக்கடை சமூகம்
பேடிமை சாத்திரம்
அக்கினியில் குளித்தாலும்
அசிங்கமென்றேசொல்லும்
மையத்து அதிகாரம்

மரணமே ஒருமுறை
தீண்டிவிடு என் இதழ்களை
இனியாவது
என் வாழ்க்கையை நான் 
வாழ்ந்துகொள்ள. 

-பிறைநிலா- 
11:03
8/2/2016

Tuesday, February 2, 2016

நாங்கள் தனித்தவர்களின் புதல்வர்கள்.



ஏதேன் தோட்டத்து 
இள மங்கைகளே,
எங்கள் பெண்களை 
நீங்கள் பார்த்ததுண்டா?
வரண்ட பூமியில்
விதைத்தலுக்கும்
சமையலறையில் 
வேகலுக்கும்
படுக்கையறையில்
பிழிதலுக்கும்
வாழ்க்கை தொலைத்த
எங்கள் தேவதைகளை
நீங்கள் பார்த்ததுண்டா?

நிலம் மட்டுமல்ல
மார்புகளும் வறண்டுதான்போனது
வறுமை தின்றுபோனதால்.
உச்சி வெயிலில் வேகலும்
பேய்ச்சி இவளென்று விம்மலும்
பழையதானது.

உங்கள் தேசத்தில்
பனிகளின் வண்ணமாம். 
எங்கள் வானத்தில் 
மழைகூட இல்லை
போர்மேகம் மூடியதால்.

குண்டு மழை
குருதி பெருக்கு
சிதைந்த பிண்டம்
சிதறிய மனிதம்

இன்று 
பூக்களை நடுகிறார்கள் இங்கு.
ஆனால் 
எங்கள் பெண்கள் பூச்சூட
கூந்தலை இழந்தவர்கள்.

புடைத்த நரம்புகளிலும்
வெறித்துப்போன கண்களிலும்
வெளிறிய உதடுகளிலும்
நாங்கள் தேவதைகளை பார்க்கின்றோம். 
என்ன சில பிண்டங்கள்
அவர்களை தேவ'தாசி'யென
நினைக்கும் சாபம் 
இங்குமட்டும்தான்.

உங்கள் ராட்சசர்கள்கூட
அன்பானவர்களாம். 
பிணவாடை என்பதே தெரியாதவர்களாம்.
உங்கள் பூமி சொர்க்கபுரியாம்
மண்ணுக்குள்ளே 
மலர்களின் வாசமாம்.

இங்கு வாருங்கள்
குருதிக்காட்டின் பிசுபிசுப்பு
மண்ணில் புதைந்த மனிதவாடை
மண்டையோட்டு சில்லின் சிதறல்
இதற்குமத்தியில் எங்கள் 
வாழ்க்கை.

இப்பொழுது சொல்லுங்கள்
யார் தேவதைகள்
யார் மீட்பரின் தூதர்கள்
நாங்கள் 
தனித்தவர்களின் புதல்வர்கள்
இறுதிவரை
அகதிகளின் அந்தரங்கம்!

-பிறைநிலா-
2/2/2016
8:56

Monday, February 1, 2016

ப்ரிய நட்சத்ரா..


என் ப்ரிய நட்சத்ரா,
உன் கண்களை மூடிக்கொள்.
நீ சூழ்ந்துள்ள என் நினைவுகள்
அழகானவை.
என் நேசக்கடல்மீது உனக்கான
அலைகளை பரப்பிவிடுகின்றேன்.
பார்த்து மகிழ்ந்துகொள்
கண்களைத்திறந்துவிடாதே.

பழிகளின் கற்கள் உன்னை 
தாக்கக்கூடும்.
பெண் நீ என்பதால்
நடத்தையில்கூட உன்னை
பழிக்கக்கூடும்.
வஞ்சகக்காரியாய் நீ தெரியக்கூடும்.
உன்னை வஞ்சிக்க ஒரு கூட்டம்
அலையக்கூடும்.
உன் படுக்கையில் மட்டும் 
பங்குகேட்டு
பரிகசிக்கவும் ஸ்பரிசிக்கவும்
அலையக்கூடும்.
நீ தனித்திருக்கையில் உன்னை
தீண்டிக்கொல்ல அரவமாய் 
அணைக்கக்கூடும்.

ஆதலால் என் பிரிய
நட்சத்ரா,
உன் கண்களைத் திறந்துவிடாதே.
என் நேச அலைகளோடே
அமைதிகொள்
நாம் புதிதாய் பிறந்து 
உலகை விதைப்போம் 
அதுவரை உன் கண்களை
நீ திறந்துவிடாதே.

-பிறைநிலா-
01/02/2016
4:49pm

Thursday, January 28, 2016

ஹிருதயா!



மௌனச்சாயத்தை
என் உதடுகளில் அப்பிவிடுகின்றாய். 
என் கேள்விகளுக்கு பதில் இல்லை.
என் நேசங்களின் முகவரி இல்லை.
உன்னிடம் 
எனக்கான பொழுதுகளும் இல்லை. 
இறுதியில் சாயம் மட்டும் என் உதடுகளுக்கு.

அது ஒரு வெளி
ஆத்மாவும் நானும் பேசும்பொருள்.

இருக்கிறாயா?
இருக்கிறேன் இருக்கிறேன்!
புரிகிறதா உனக்கு?
புரியவில்லை தெரிகிறது!
முடிவு?
விளங்கவில்லை.
ஓ.. என் ஆத்மாவே...
ஓலமிடாதே அலுத்துவிட்டது.
என் கண்ணீருமா?
பழகிப்போனது.
அப்பொழுது நான்?
பழையவள்தானே நீ!
என் நேசம்?
புதிதாய் ஏதுமில்லை.

ஆக,
பரிசுத்தத்திற்கு பதில் புதுமைதான் உன் தேவை.
ஹ..ஹ.. உலகத்தேவை!
ஆத்மார்த்தீ ஒழிந்துபோ
இயலாது.
ஏன்?
நான்போனால் நீ பிணம்.
அந்த திமிர்தானே உனக்கு.
இல்லை யதார்த்தம்.

மீண்டும் மௌனச்சாயம்
உதடுகளில்.
ஆத்மா புகுந்துகொண்டது 
ஹிருதயஒலிக்குள்.
வெளி குறுகி வழியாக
நீ தேடப்படும் 
இறுதி பயணவிளிம்புகளில்
நடக்கத்தொடங்கியிருந்தது 'நான்'. 

-பிறைநிலா-
28-01-2016
6:35pm


Friday, January 22, 2016

ப்ரியத்தீ!


நீண்ட பொழுதொன்று 
பிரியங்களோடு 
பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டது காலம். 
வார்த்தைகளின்றிய சலசலப்பை 
பார்வைகளால் பகிர்ந்துகொண்டது. 
மயான அமைதி. 
மட்டுப்படுத்தப்பட்டிருந்தது 
உனக்கும் எனக்குமான 
இடைவெளி. 

நான் 
நரகத்தின் வாசலில் தேவதையாயும் 
நீ 
சொர்க்கத்தின் உச்சத்தில் ராட்சசனாயும்.

நடுவில் பெருகியதென்னவோ 
நேசத்தின் ஜீவநதி. 
என் கண்களுக்கும் 
உன் பாதங்களுக்குமான ஸ்பரிசம் 
நதியில் கலந்துபோனது. 

இறுதி அணைப்பு அது. 
பார்வைகளால் பரிமாறப்பட்டது. 
ஸ்பரிசிக்கத்துடித்தது என்னவோ 
பிரியங்களை மட்டும்தான். 
முடிவிலியாய் மூடப்பட்டது 
உனக்கும் எனக்குமான 
பிரியங்களின் நுழைவாயில். 

-பிறைநிலா-
22/01/2016
3:25

Tuesday, October 28, 2014

என் ஒளியிழந்த வானை உமிழ்ந்துகொண்டிருக்கிறாய் ஷாகிரா..!


என் ஒளியிழந்த வானை 
உமிழ்ந்துகொண்டிருக்கிறாய்
ஷாகிரா

சிவப்பு பச்சை மஞ்சளென
நீ துப்பிய வண்ணங்கள்
அங்கங்கே
சிதறி பறக்கின்றன.

வானவில்லின்
வண்ணம் விட்டு
புது வண்ணம் 
குழைத்து இழைக்கிறாய்.

’சர்பத்’நிறத்தையும் மிஞ்சிடும்
இளவண்ண இதழ்கொண்டு
இதழ்குவிக்கின்றாய்.

ஜொலித்து நிற்பது
என் வண்ணம் கரைந்த
வானம் மட்டுமல்ல
எண்ணமிழந்த
வாழ்க்கையும் தான்.

உன் புன்னகையின் 
விழிம்பில்
பரிசளிக்கின்றாய் 
’குதா’வின் 
பரிசுத்த ஆசிகளை.

ஷாகிரா...

ஓ..நீ 
எங்காவது 
பறந்துகொண்டேயிருப்பாய்
ஏதாவது ஒரு
ஒளியற்ற வானை
வண்ணமாய் உமிழ்வதற்கு!



-பிறைநிலா-

Tuesday, February 11, 2014

அத்தான் உனை ..



உந்தன் விழிசொல்லும் 
ஒற்றை வார்த்தையில் 
பற்றிப்பிடிக்கின்றது 
நாணம்... 

உந்தன் 
மீசைநுனி சொல்லும் 
ரகசியவார்த்தையில் 
வற்றியே போகின்றது 
வெட்கம்... 

கைகள் கோர்க்கத்தான் 
தொட்டு விலகத்தான் 
அத்தான் உனை 
அன்பால் அணைக்கத்தான்... 

மௌனித்த பல 
நொடிகளில் 
இதழ்களால் 
கோடிமுறை பேசிவிடுகிறாய்... 

புன்னகையை 
மட்டும் விதைக்கிறது 
பெண்மை...
அதையேனும் விட்டுச்செல் 
களவாடிப்போகாமல்.. 

(யாவும் கற்பனையே.) 

-பிறைநிலா-

Friday, January 31, 2014

வந்துவிடு..!



வா..
வந்து பூட்டிக்கொள்..
வாட்டமில்லாத
உன் இமைகளோடு
வருடிக்கொள்..

தேய்கின்ற காலங்களை
தேயாமல்
பார்த்துக்கொள்வோம்..

ஓயாத கடல்
பெருக்கி
ஆடையாக
உடுத்துக்கொள்வோம்..

வானவில்லை வட்டமிட்டு
தெம்மாங்கு
நாம் படிப்போம்..

தென்றலைத் தேராக்கி
தேவலோகம்
போய்வருவோம்..

என்மேல்
உனை உடுத்து..
உன்மேல்
எனை அணைத்து..

உந்தன் நெஞ்சில்
ஒட்டிக்கொள்
எந்தன் உயிரை..

இரு விரலிடையில்
தைத்துக்கொள்
எந்தன் இதழ்களை..

உனைநோக்கி 
எனையிழுத்து
உயிரோடு
கவியெழுது..

வா..
வசந்தங்கள் 
பல சொல்லி
வருத்தங்களை
களைந்துவிடு..
வந்துவிடு..!

கவியன்புடன்
-பிறைநிலா-

Thursday, January 30, 2014

புரியவில்லை..



உனக்குத்தான் புரியவில்லை 
எந்தன் நேசத்தின் 
ஆழம் என்னவென்று...

உனக்குத்தான் புரியவில்லை 
நான் வாடும் தனிமையில் 
நீ வேண்டும் என்பது...

உனக்குத்தான் புரியவில்லை 
உலகமெல்லாம் நீயாகி 
என்னை 
உருக்குலைக்கிறாய் என்பது... 

தூங்கும்போதும் 
உன் ஞாபகம்...
விழிகளுள்ளும் 
உன் பார்வைகள்...

இதயத்தில் என்றும் 
உன் வார்த்தைகள்...
தனியாய்த்தான் தவிக்கிறேன் 
என்றாலும் 
நீ வாழ்கிறாய் என்னுள்ளே...

தோற்றுத்தான் போய்விட்டேன் 
உன்னிடத்தில் மட்டுமல்ல.. 
இந்த உலகத்தின் 
பார்வையிலும்தான்...

-பிறைநிலா

Saturday, December 28, 2013

இரவுகளின் நீட்சி..



இரவுக்கு மட்டுமே
நீட்சிகளின் வரங்கள்
கொடுக்கப்பட்டிருக்கிறதுபோலும்..
சொடுக்கப்பட்ட
கடிகார கம்பிகள்
நகர மறுக்கும்..
அவலங்களின்
உச்ச ஸ்தாயி
உயிரை உலுக்கும்..
எங்கோ தொலையத்துடிக்கும்
ஜீவனும் புதைந்துபோகும்
அந்தகாரத்தில்..
விடியல்களை ஒத்திப்போடும்
இந்த இரவுக்கு மட்டுமே
நீட்சிகளின் வரங்கள்
கொடுக்கப்பட்டிருக்கிறதுபோலும்..


-கவியன்புடன்
பிறைநிலா-

Tuesday, November 26, 2013

மீண்டும் விதைத்தல்..


மண் பிளந்து
மரம் நாட்டி
வேர் பிளந்து
பணமாக்கி
பிணமாய் போகும்
உலகமிது..

இங்கு
மரணம் மட்டுமல்ல
மனிதம் கூட
மரணித்துவிட்டது
இன்று..

ஆழக்கடலோடி
நீல வான் பல தாண்டி
புனிதத்தை வைத்தான்
இறைவன்..

அதை
புதைப்பதில்
இனிமைகண்டான்
மனிதன்..

தென்பொதிகை
இசைபாடி
தேன் சிந்தும்
கனிதேடி
தொலைந்துதான் போனோம்
பலவற்றை
தொலைத்தும்தான் போனோம்..

ஏக்கத்திலும்
எதிர்ப்பினிலும்
எரித்துவிட்டோம் 
எம் வாழ்வை..

என்றாவது
புதிதாய் விதைப்போம்
நம் கனவை..

மீண்டும்
புதிதாய் ஜனிப்பிப்போம்
வெண்நிலவை..


-கவியன்புடன்
பிறைநிலா-

Saturday, October 26, 2013

பூனைகள் உலகம்..


எங்கோ 
நீண்டுபோகின்ற
இரவு..
அதற்குள் 
தொலைந்துபோகின்ற 
நிலவு..

மௌனங்கள்
உடைபட்டு
மோகங்கள்
தடைப்பட்டு
சலங்கள்
விதைக்கப்படுகின்றன..

சுவர்களை சுற்றியும்
‘மியாவ் மியாவ்’ 
சத்தம்..

பச்சை நிற விளக்கு
அதில்
பளிச்சிட்டு எரியும்
நெருப்பு..

இரைகளைத்தேடியதாய்
இரைச்சலைக்கிளப்புகிறது
இயற்கை..

கறுப்பு பூனைகளின்
மரத்துப்போன நாவிற்கு
மலர்ந்து மணம்பூத்த
மலர்களே இரையாக..

வெள்ளை நிற
பூனைகளின்
வண்ணநிறம்கூட
விஷமாகும் காலமிது..

எந்த நிறமென்றாலும்
இவை யாவும் ஒரே
தரம் அன்றோ..
எங்கும் 
மலர்களை சிதைத்துப்போக
மானிடராய் பிறந்ததன்றோ..

எங்கெங்கிலும்
பச்சை நெருப்பு..
அதில் கருகிச்சரியும்
மங்கை விருப்பு..

மீண்டும்
எங்கோ 
நீண்டுபோகின்ற
இரவு..
அதற்குள் 
தொலைந்துபோகின்ற 
நிலவு..


-கவியன்புடன்
பிறைநிலா-

Sunday, June 16, 2013

தந்தைக்கு ஒரு மாலை...




தன்னந்தனியே 
தாய்வயிறு கிழித்து 
மண்தொட்ட அந்தநேரம் 
என்னைத்தொட்ட 
முதல் உறவு 
நீயே அப்பா...

என் 
ஒற்றை விரல் கோர்த்து 
வாழ்க்கைபயணத்தை 
தொடக்கிவைத்தாய்...

பெண்ணாய் 
நான் பிறந்தேனென 
பெருமையோடு 
நீ மகிழ்ந்தாய்... 

காற்று வெளியினில் 
கைகோர்த்து 
கதைகள் 
பல சொன்னாய்... 

என் 
பாதம் பிடித்து 
நடை பழக்கி 
நீ மகிழ்ந்தாய்... 

மனதிற்கு மட்டுமல்ல 
அறிவிற்கும் 
கற்றுத்தந்தாய் 
பல கலை... 

நான் 
சிந்திடும் கண்ணீரில் 
உன் இதயத்தில் 
வலி கண்டாய்... 

என் 
புன்சிரிப்பில் 
துள்ளிக்குதித்தாய்
உலகை வென்றதாய்... 

இன்று 
என் பாதையின் 
ஒவ்வொரு அடியும் 
வருகின்றதே
உன் சுவட்டை தொடர்ந்து... 

ஆண்களில் 
தாய் நீ... 
அன்னையின் 
மறு உரு நீ... 

திறமைக்கு திறமையும் - 
துணிவுக்கு தனித்தன்மையும் 
நீ கற்றுத்தந்தவைதானே 
அப்பா... 

மீண்டும் 
ஒருமுறை 
மழலையாவேனா? 
உந்தன் மடியினில் நான் தூங்க...?

 கவியன்புடன்
பிறைநிலா- -