Tuesday, February 11, 2014

அத்தான் உனை ..



உந்தன் விழிசொல்லும் 
ஒற்றை வார்த்தையில் 
பற்றிப்பிடிக்கின்றது 
நாணம்... 

உந்தன் 
மீசைநுனி சொல்லும் 
ரகசியவார்த்தையில் 
வற்றியே போகின்றது 
வெட்கம்... 

கைகள் கோர்க்கத்தான் 
தொட்டு விலகத்தான் 
அத்தான் உனை 
அன்பால் அணைக்கத்தான்... 

மௌனித்த பல 
நொடிகளில் 
இதழ்களால் 
கோடிமுறை பேசிவிடுகிறாய்... 

புன்னகையை 
மட்டும் விதைக்கிறது 
பெண்மை...
அதையேனும் விட்டுச்செல் 
களவாடிப்போகாமல்.. 

(யாவும் கற்பனையே.) 

-பிறைநிலா-

Friday, January 31, 2014

வந்துவிடு..!



வா..
வந்து பூட்டிக்கொள்..
வாட்டமில்லாத
உன் இமைகளோடு
வருடிக்கொள்..

தேய்கின்ற காலங்களை
தேயாமல்
பார்த்துக்கொள்வோம்..

ஓயாத கடல்
பெருக்கி
ஆடையாக
உடுத்துக்கொள்வோம்..

வானவில்லை வட்டமிட்டு
தெம்மாங்கு
நாம் படிப்போம்..

தென்றலைத் தேராக்கி
தேவலோகம்
போய்வருவோம்..

என்மேல்
உனை உடுத்து..
உன்மேல்
எனை அணைத்து..

உந்தன் நெஞ்சில்
ஒட்டிக்கொள்
எந்தன் உயிரை..

இரு விரலிடையில்
தைத்துக்கொள்
எந்தன் இதழ்களை..

உனைநோக்கி 
எனையிழுத்து
உயிரோடு
கவியெழுது..

வா..
வசந்தங்கள் 
பல சொல்லி
வருத்தங்களை
களைந்துவிடு..
வந்துவிடு..!

கவியன்புடன்
-பிறைநிலா-

Thursday, January 30, 2014

புரியவில்லை..



உனக்குத்தான் புரியவில்லை 
எந்தன் நேசத்தின் 
ஆழம் என்னவென்று...

உனக்குத்தான் புரியவில்லை 
நான் வாடும் தனிமையில் 
நீ வேண்டும் என்பது...

உனக்குத்தான் புரியவில்லை 
உலகமெல்லாம் நீயாகி 
என்னை 
உருக்குலைக்கிறாய் என்பது... 

தூங்கும்போதும் 
உன் ஞாபகம்...
விழிகளுள்ளும் 
உன் பார்வைகள்...

இதயத்தில் என்றும் 
உன் வார்த்தைகள்...
தனியாய்த்தான் தவிக்கிறேன் 
என்றாலும் 
நீ வாழ்கிறாய் என்னுள்ளே...

தோற்றுத்தான் போய்விட்டேன் 
உன்னிடத்தில் மட்டுமல்ல.. 
இந்த உலகத்தின் 
பார்வையிலும்தான்...

-பிறைநிலா

Saturday, December 28, 2013

இரவுகளின் நீட்சி..



இரவுக்கு மட்டுமே
நீட்சிகளின் வரங்கள்
கொடுக்கப்பட்டிருக்கிறதுபோலும்..
சொடுக்கப்பட்ட
கடிகார கம்பிகள்
நகர மறுக்கும்..
அவலங்களின்
உச்ச ஸ்தாயி
உயிரை உலுக்கும்..
எங்கோ தொலையத்துடிக்கும்
ஜீவனும் புதைந்துபோகும்
அந்தகாரத்தில்..
விடியல்களை ஒத்திப்போடும்
இந்த இரவுக்கு மட்டுமே
நீட்சிகளின் வரங்கள்
கொடுக்கப்பட்டிருக்கிறதுபோலும்..


-கவியன்புடன்
பிறைநிலா-